தேடிதரிசித்த திருதலங்கள்
'கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே
பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம்நீர்
சிட்ட னார்திரு வேட்களங் கைதொழப்
பட்ட வல்வினை யாயின பாறுமே.'
-திருநாவுக்கரசர்
சோழ நாட்டு வடகரை காவிரித் தலங்களில் இரண்டாவதான இத்தலம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு. கோயிலின் அருகே மட்டுமல்ல, வாசலிலும் காய்கறிச் சந்தை அமைந்திருக்கிறது. ஆனால், கோயிலுக்குள் நுழைந்து விட்டால், சந்தையிரைச்சல் ஏதுமின்றி அமைதி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள கோயில் சுமார் 1910 வாக்கில் கானாடுகாத்த செட்டியார் என்பவரால் அமைக்கப்பட்டதாகும்.
தலபுராணம்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முதலாவது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம்.
அம்மன் சன்னதியில் அர்ஜுனன் தவம் குறித்த சிற்பங்களைக் காணலாம்.
பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அனைத்து அஸ்திரங்களையும் கரைகண்ட அர்ச்சுனன், இறுதியாகப் பாசபத அஸ்திரம் வேண்டி சிவபெருமானைத் தொழுதிருந்தான்.
அப்போது, அவனைச் சோதிக்க முக்கண்ணன் அனுப்பிய பன்றியானது வில்லாளனின் தவத்திற்கு இடையூறு செய்ய, சினமுற்ற விஜயன் அதைத் துரத்த, அது கையில் அகப்படாமல் ஓடியவண்ணமே இருக்க, வெகுண்ட பார்த்திபன் வில்லால் அடித்து வீழ்த்தினான்.
அதே கணம், அங்கு தோன்றிய வேடனொருவன் அது தனது பாணத்தால் வீழ்ந்தது என்று சாதிக்க, வாய்ச்சணடை கைச்சண்டையாக முற்றி அர்ச்சுனனம் தன் வில்லால் வேடன் மண்டையில் ஓங்கியடிக்க, அந்த நொடியில் வேடன் உரு மறைந்து அங்கே சாம்பசிவன் நின்றிருந்தான். அர்ச்சுனனின் தவத்தைப் போற்றி, சங்கரன் அவனுக்கு பாசுபத அஸ்திரத்தையும் அருளினான். அத்தகைய புகழ் பெற்ற தலமாகும், அள்ளாமலை நகரில் அமைந்துள்ள திருவேட்களம் என்னும் இத்திருக்கோயில்.
இங்கு நடராசன் முருகனாகவும், வேலன் முக்கண்ணனாகவும் தோன்றி அருள் பாலித்தனர் என்பர்.
மூலவரின் பெயர் பாசுபதீஸ்வரர்.
தாயாரின் திவ்யநாமம் சற்குணாம்பாள். அழகு தமிழில் நல்லநாயகி.
திருஞான சம்பந்தர் இங்கிருந்துதான் சிதம்பர ஆடல்வல்லானை தரிசித்தார் என்பர்.
அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்றதாகும் இததலம்.
தலச்சிறப்பு
சூரியனும் சந்திரனும் அருகருகே அமைந்துள்ல இக்கோயிலில், சூரிய சந்திர கிரகண காலங்களில் வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
வில்லாளனுக்கு அஸ்திரம் அளித்த பெருமான் சொல்லாடலிலும் குறைகளைப் போக்குவார் என்று புகழ் பெற்றார். பேச்சுக் குறைபாடு உள்ளோர் இங்கு பிரசாதமாக வழங்கப்படும் மண் உருண்டையை உண்டால், தங்கள் குறை நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.
தலப்பண்
கல்லாலே அடித்தவனும் சொல்லால் அடித்தவனும்
பல்லாண்டு வாழ்த்தியேதம் பிறவிக்கடன் தீர்த்தவனாம்
வில்லாலே அடித்தநல் விஜயனுக்கும் அருளீந்தான்
இல்லையொரு பெம்மான் அவன்போலே இவ்வுலகில்
ஓம் நமச்சிவாய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக