#நாளை_எறிபத்த_நாயனார்_குருபூஜை (08.03.2015) #மாசி_ஹஸ்தம்
-
"கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியார்களின் பகைவரைக் (பட்டத்து யானையை) கொன்று சைவத்தை வளர்த்தவர்."
-
"மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது
முழையரி என்னத் தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும்
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார்."
-
#பாடல்_விளக்கம் :
மழையினால் செழிப்புற்று ஓங்கும் நிலவுலகின்ற எவ்விடத்தும் நிலைபெற்ற சைவ சமய நெறி தழைத்து ஓங்கத் தீப்போல் ஒளிர்கின்ற சடைமுடியையுடைய சிவபெருமானின் அடியவர்களுக்கு, நேரத்தகாத தீங்குகள் நேர்ந்த பொழுது, மலையிடத்து இருக்கும் குகையில் வாழும் சிங்க ஏறு போல வெளிப்பட்டு, அத்துன்பம் செய்தாரது வலிமை அழியுமாறு அவர்களை அழித்து, அத்துன்பத்தினின்றும் நீக்கும் பழமையான மறைகளும் போற்றுதற் குரிய தூய்மையான மழுப்படையைத் தம்முடைய திருக்கரத்தில் தாங்கப் பெற்றவர்.
-
#எறிபத்த_நாயனார்_புராணம்
-
#இறைவன் : பசுபதீஸ்வரர்
#இறைவி : கிருபாநாயகி
#அவதாரத் தலம் : கரூர்
#முக்தி_தலம் : கரூர்
#குருபூசை_நாள் : மாசி - ஹஸ்தம்
-
கருவூர் என்னும் தலத்தில் எறிபத்தர் திருஅவதாரம் செய்தார். சிவனடியார்களுக்குத் தீங்கு செய்யும் எவரையும் மழு என்னும் ஆயுதம் கொண்டு தண்டிப்பது இவரது வழக்கம். கருவூர் ஆலயத்தில் பூத்தொண்டு செய்து வந்தார் சிவகாமியாண்டார் என்னும் தொண்டர். ஒரு நாள் அவ்வாறு இறைவனுக்காக பூக்குடலையில் பூக்கள் கொண்டு வந்தபோது அவ்வழியே வந்த பட்டத்து யானை அப்பூக்குடலையைப் பிடித்துச் சிந்த தொண்டர் செய்வதறியாது சிவதா என்று அலறினார்.
-
இதனைக் கேள்விப்பட்ட எறிபத்தர் அங்கு வந்து அப்பட்டத்து யானையையும், பாகனையும் தன் மழுவால் கொன்றார். செய்தி அறிந்த மன்னன் யாரோ பகைவர் இச்செயலைச் செய்தனர் என்று கருதி படையுடன் அங்கு வந்தான். நாயனாரைக் கண்டதும் நடந்ததை அறிந்து தவறு யானையுடையது என்பதை உணர்ந்து அந்த யானைக்கு உரிமையுடையவனான தன்னையும் கொல்லவேண்டும் என்று அவன் நாயனாரிடம் வேண்டினான்.
-
இப்படிப்பட்ட சிவபக்தனான அரசனுக்குத் துன்பத்தைக் கொடுத்துவிட்டோமே என்று நினைத்து நாயனார் தம்மையே மாய்த்துக்கொள்ள துணிகிறார். அச்சமயத்தில் இறைவன் காட்சி கொடுத்து இறந்தவர்களையெல்லாம் உயிர்ப்பித்து அருளுகிறார்.
-
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக