Sabari Manickam
மகர ஜோதி மலையில் தெரியும் ஜோதி .....
நமக்கு ஒரு வருடம் என்பது சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் பூமியில் 24 மணி நேரம் ஒரு நாள் என நாம் கணக்கிடுகிறோம் அல்லவா? சூரிய குடும்ப என்ற நம் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள் என்பது பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றிவருவதை குறிக்கும். அதாவது பூமி தன்னை தானே சுற்றினால் நமக்கு ஒரு நாள்.
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வந்தால் சூரிய மண்டலத்திற்கு ஒரு நாள். இந்த ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் தானே? வானவியல் (astronomy) இக்கருத்தை ஒத்துக்கொள்கிறது. இதற்கு நட்சத்திர மணி அல்லது சைடீரியல் டைம் என கூறுகிறார்கள்.
சூரிய மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவ லோகம் என உருவகப்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களின் ஒரு நாள் நமக்கு ஒருவருடம் ஆகிறது. தேவர்களின் இந்த ஒரு நாள் இரவு பகல் என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? நமக்கு 12 மணி நேரம் பிரிப்பதை போல இவர்களுக்கு 6 மாதம் பகல் , 6 மாதம் இரவு என கூறலாம். இத்தகைய தேவர்களின் இரவு பகல் என்பதையே உத்திராயணம், தட்ஷிணாயனம் என்கிறோம்.
நம் நாள் எப்படி சூரிய உதயத்திலிருந்து துவங்குகிறதோ அது போல உத்திராயணம் என்ற தேவர்களின் பகல் சூரியன் குறிப்பிட்ட நிலைக்கு வருவதால் துவங்குகிறது. ராசி மண்டலத்தில் 12 ராசிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதில் 6 ராசிகள் பகல் வேளையும் 6 ராசிகள் இரவு வேளையும் குறிக்கும். பகல் வேளையை குறிக்கும் ராசிகளில் முதலில் ஆரம்பிக்கும் ராசி மகர ராசியாகும்.
மகர ராசியில் சூரியன் நுழைந்து உத்திராயண காலத்தை துவக்கும் வேளையை மகர ஜோதி என்கிறார்கள். இது மகர ராசியில் ஜோதி சொரூபமாக இருக்கும் சூரியனை குறிப்பதாகும். இதை தவிர்த்து காந்த மலை என்ற இடத்தில் தெரியும் ஜோதி , அதிசயம் அற்புதம் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மகர சங்கிரமம், மகர ஜோதி என்பது சூரியனின் நிலையையும், உத்திராயண காலத்தையும் குறிக்குமே தவிர மலையில் தெரியும் ஜோதியை அல்ல.
மலையில் தெரியும் ஜோதி இயற்கையாக தெரியும் விஷயம் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படும் விஷயமே...!
பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..!
திருவண்ணாமலையில் ஏற்றப்படுவதை போல சபரிமலையிலும் தை மாதம் ஒன்றாம் தேதி (உத்திராயண ஆரம்பம்) கோவில் நிர்வாக குழுவினரால் ஜோதி ஏற்றப்படுகிறது. இது எனது கருத்து மட்டுமே. நீங்கள் இது இயற்கையாக இறைவனே ஜோதியாக வருகிறான் என நினைத்தீர்கள் என்றால் நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!
திருப்பதி அதிசயம், சமய புரம் அதிசயம் என வதந்தியை கிளப்பிவிடும் நபர்கள் தான் இது போன்ற வதந்தியையும் துவக்கி இருக்க வேண்டும். ஆன்மீக யோகிகளின் இருப்பிடத்தில் உங்களின் உள்ளே தான் அதிசயம் நடக்க வேண்டுமே தவிர வெளியே அல்ல...!
48 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து எளிமையாக வாழ்ந்து இறைவனை காண செல்லும் பொழுது ஜோதி வெளியே தெரிய வேண்டுமா அல்லது உள்ளே தெரிய வேண்டுமா என நாம் தான் முடிவு செய்ய வேண்டும்...!
நன்றி ஒம்கார்சுவாமிகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக