நன்றி ....
தேடிதரிசித்த திருதலங்கள்
----------------------------------------------------------------------------------------
'கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.'
- திரு ஞானசம்பந்தர்
சகல ரோகங்களையும் தீர்க்கும் பெருமானாக வைத்தீஸ்வரன் கோயில் உறை தையல்நாயகி சமேத வைத்திய நாதனையே உலகம் பெருமளவில் அறிந்திருந்தாலும், அதற்கு ஒப்பான ஒரு பழந்தலம் சென்னை மாநகரில் நடுப்பகுதியிலேயே உள்ளது என்பது பலரும் அறிந்திராத ஒரு தகவலாக இருக்கலாம். அதுவே திருவான்மியூரில் அமைந்துள்ள நமது மருந்தீஸ்வரர் கோயிலாகும்.
தலபுராணம்
சிவபெருமான் திருமணத்தின்போது குடை சாய்ந்தாற்போலாகி விட்ட பூமியை சமனப்படுத்த தெற்கு நோக்கி பயணமான அகத்திய முனிவர் சற்றே நோய் வாய்ப்பட்டபோது, இத்தலத்தில் இறைவனைச் சேவித்துத் தன் நோய் குணமடைந்த காரணத்தால், இத்தலப் பெருமான் மருந்தீஸ்வரன் என்று பெயர் பெற்றார். அது மட்டுமல்லாது, அகத்தியருக்கு பல பிணி தீர்க்கும் மருந்துகளையும், மூலிகைகளையும் அடையாளம் காட்டியதாலும் இப்பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
இராமாயணம் அளித்த வால்மீகி முனிவர் முக்தி அடையத் தலம் தேடியபோது அவரிடம் மார்க்கண்டேய மஹரிஷி, 'எத்தலத்தில் யாம் இங்குள்ளோம் என்ற அசரீரி கேட்கிறதோ, அங்குதான் உமக்கு முக்தி எனப் புகன்றாராம். தேசாந்தரியாக அலைந்த வால்மீகிக்கு இவ்விடத்தில் அசரீரி ஒலித்து அவர் இங்கு முக்தி அடைந்தார் என்பதும் வழிவழி வரும் கூற்று. வால்மீகிக்கு இறைவன் வழி காட்டிய ஊரானதால் இது திரு வான்மி யூர் என்றானதாம்.
இறைவனுக்கு மருந்தீசன், பால்வண்ண நாதர், வேதபுரீஸ்வரர் என்ற பெயர்கள் வழங்குகின்றன.
தாயாரை திரிபுரசுந்தரி, சொக்க நாயகி, சுந்தர நாயகி என்று பலவாறு அழைக்கிறார்கள்.
காஸ்யப முனிவரின் சாபத்தால் பூவுலகு அடைய நேர்ந்த காமதேனு தினமும் இங்குள்ள லிங்கத்தின்மேல் பால் சொரிந்து தன் சாபம் நீங்கியது. இதனால், இங்குள்ள மூலவர் பால்வண்ண நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் முடியில் பசுவின் குளம்பு பட்ட வடுக்களைக் காணலாமாம் (பல ஸ்வயம்பு லிங்கக் கோவில்களில் இது போன்ற வரலாறு கூறப்படுவதும், லிங்கத்தின் மேற்புறம் பசுக் குளம்பு வடுக்கள் இருப்பதாகச் சொல்வதும் கவனிக்கத்தக்கது.
பாம்பன் சுவாமிகள் வழிபட்ட தலம் இது.
இத்தலத்தில் பிரம்மனே மாடவீதிகள் அமைத்து பங்குனி பூஜை நிகழ்த்தியதாக நம்பிக்கை உண்டு.
வான் பொய்த்த காலை, அப்பையர் என்னும் மகானின் வேண்டுகோளுக்காக தான் பொய்க்காது மழை பெய்வித்த வேதபுரீஸ்வரன் அம்மகான் தன்னை தரிசிக்க ஏதுவாகவே மேற்புறம் திரும்பி அமைந்துள்ளான் என்று கூறுவர்.
சிவனின் சிரத்திலிருக்கும் கங்கை நதியிலிருந்து ஐந்து துளிகள் இத்தல தடாகத்தை உருவாக்கியதாக வரலாறு.
தலச்சிறப்பு
தனது திருநாமத்துக்கு ஏற்றவாறு ஈசன் இங்கு தன்னை வந்தடையும் பக்தர்களுக்கு சகல உடல், மன ரோகங்களையும் அகற்றிக் காத்தருள்கிறான்.
தலப்பண்
மாயன் அவதாரம் மண்ணில் உரைத்தவன்
காயம் விடுத்துக் கரைசேர் தலமிதே
நோய்நீக்கு ஈசனவன் நேயம் புகழ்ந்திடவே
வாயொன்று போதாது காண்.
ஓம் நமச்சிவாய!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக