நண்பர்கள்

12 மார்., 2016

சுபாஷிதம்

அம்ருதவசனம்

சுபாஷிதம் - அல்லது நீதிக்கோவை

நன்றி :

http://sundarjiprakash.blogspot.in/2013/07/blog-post_2013.html?m=1

சுபாஷிதம் என்பது சமஸ்க்ருதத்தில் மிகப் புராதனமான வடிவத்தில் சான்றோர்களின் அனுபவங்கள் ச்லோகங்கள் போலத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சு என்றால் நல்லவிதமாக என்றும், பாஷிதம் என்றால் சொல்லப்பட்டவை என்றும் பொருள் சொல்லலாம். நீதிக்கோவைகள் என்று தமிழில் சொல்லலாம். ஆத்திசூடி, உலகநீதி போன்ற வடிவங்கள் எல்லாம் இதிலிருந்தே பிறந்தவை என்று கருத இடமிருக்கிறது.

சமஸ்க்ருதத்தின் பர்த்ருஹரி துவங்கி, சாணக்கியர், காளிதாஸர், பவபூதி, சோமதேவ பட்டர், கல்ஹணர், வேதாந்த தேசிகன் வரையிலும் பலரும் இவ்வடிவத்தில் எழுதியிருக்கின்றனர்.

பஞ்சதந்திரமும், ஹிதோபதேசமும் இந்த சுபாஷிதத்தை மிக விரிவாக உபயோகித்திருக்கின்றன. சுபாஷிதத்தின் வேர்களோ ராமாயணம், மஹாபாரதம், கீதைகள் போன்ற தொன்மையான விருக்ஷங்களின் அடியில் தென்படுகின்றன.  

எழுதியவர்களின் பெயர்கள் அற்று நாலடியார் போன்று ஒரே தொகுப்பாக என் கையில் இருக்கும் 400 ச்லோகங்களைக் கொண்ட சுபாஷிதத்தின் மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்காக.

பிழைகளுக்கு உ(ஆ)ட்பட்டவன் நான். திருத்துங்கள் தேவைப்படும் இடங்களில். திருத்திக் கொள்கிறேன்.

சுபாஷிதம்
1.
அக்னி: சேஷம் க்ருணா: சேஷம் ஷத்ரு: சேஷம் ததைவ ச
புன: புன: ப்ரவர்த்தேத தஸ்மாத் சேஷம் ந கார்யேத்

நெருப்பு, கடன், பகை இம்மூன்றும் சிறிது எஞ்சினாலும் மீண்டும் வளரும். ஆகவே முற்றிலுமாய்த் தீர்க்கப்பட வேண்டும்.

2.
ப்ருத்வீவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் சுபாஷிதம்.
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசங்யா பர்தீயதே 

பூமியின் மூன்று  ரத்தினங்கள் நீர், அன்னம், சுபாஷிதம். முட்டாள்களோ கற்களை ரத்தினம் என்பார்கள்.

3. 
ந அபிஷேகோ ந சம்ஸ்கார: ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜிதஸ்த்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்ரதா

வன ராஜ்யத்தில் சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம் நடப்பதில்லை; தன் சுய பராக்கிரமத்தாலேயே அது ராஜாவாகிறது.

4.
வனானி தஹாதோ வன்ஹே ஸகா பவதி மாருத:
ஸ ஏவ தீப நாஷாய க்ருஷே கஸ்யாஸ்த்தி சஹ்ருதம்

வனத்தில் தீப்பற்றினால் பரவ உதவும் காற்று அகலின் சுடரை அவிக்கிறது. சக்தி அற்றோருக்கு நட்பில்லை.

5.
வித்யா விவாதாய தனம் மதாய ஷக்தி: பரேஷாம் பரிபீடனாய
கலஸ்ய: ஸாதோ: விபரீதம் ஏதத் க்ஞானாய தானாய ச ரக்ஷணாய  

துர்மதி படைத்தவனின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவனுக்கோ அவன் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.

6.
துர்பலஸ்ய பலம் ராஜா பாலானாம் ரேதனம் பலம்
பலம் மூர்க்கஸ்ய மௌனித்வம் சௌராணாம் அந்ருதம் பலம்

அரசன் நலிந்தோரின் பலம்; அழுகை குழந்தையின் பலம்;
மௌனம் மூர்க்கனின் பலம்; பொய்யுரைப்பது கள்வனின் பலம்.

7.
அஷ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச
அஜாபுத்ரம் பலிம் ததாத் தேவோ துர்பலகாதக:

குதிரையோ, யானையோ, புலியோ அல்ல;  அல்லவே அல்ல; ஆட்டுக்குட்டியே வேள்வியில் பலியிடப்படுகிறது; நலிந்தோரைக் கடவுளும் காப்பதில்லை.

8.
அஷ்டாதஷ புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம் 

பதினெட்டுப் புராணங்களிலும் வியாஸர் சொல்லும் சாரம் இதுதான்; பிறர்க்கு உதவுவது புண்ணியம். பிறரைத் துன்புறுத்துதல் பாவம்.

9.
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேஷம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

இமயம் முதல் குமரி வரை கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

10.
ஏதத்தேஷ ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா:

பூமியில் பிறந்த எல்லா மக்களும் இந்த நாட்டின் ரிஷிகளும், முனிகளுமான முன்னோர்களின் வரலாற்றிலிருந்து  தத்தமது பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

11. 
அயம் நிஜ: பரோ வேதி கணனாலகுசேதஸாம்
உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்

நம்மவன்; பிறத்தியான் என்ற வேற்றுமை குறுக்கு புத்தியுடைவனது; யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பான் பரந்த மனமுடையவன்.

12.
க்ஷணஷ: கணஷ்சைவ வித்யாம் அர்தம் ச சாகயேத்
க்ஷணே நஷ்டே குதோ வித்யா கணே நஷ்டே குதோ தனம்

பெறும் ஒவ்வொரு நொடியும் கற்கவும், ஒவ்வொரு கணமும் சம்பாதிக்கவும் செய்; இல்லையேல் ஒவ்வொரு நொடியும் கல்வி இழப்பு; ஒவ்வொரு கணமும் செல்வம் இழப்பு.

13.
அஷ்வஸ்ய பூஷணம் வேகோ மந்தம் ஸ்யாத் கஜபூஷணம்
சாதுர்யம் பூஷணம் நார்யா உத்யோகோ நரபூஷணம்.

வேகம் குதிரைக்கும், மந்தநடை யானைக்கும், புத்திசாலித்தனம் பெண்ணுக்கும், வேலை ஆணுக்கும் அணிகலன்கள்.

14.
க்ஷுத், த்ருர்த், ஆஷா: குடும்பின்ய மயி ஜீவதி ந அன்யகா:
தாஸாம் ஆஷா மஹாஸாத்வீ கதாசித் மாம் ந முஞ்சதி

பசி, தாகம், ஆசை இம்மூன்றும் மனிதனின் மூன்று மனைவிகள்; அவன் மறையும் வரை இம்மூன்றும் அவனைப் பிரியாது. அதிலும் ஆசை என்பவள் 'மிகப் பொறுமைசாலி'. ஒருபோதும் அவனைப் பிரியமாட்டாள்.

15.
குலஸ்யார்த்தே த்யஜேதேகம் க்ராம்ஸ்யார்த்தே குலம்த்யஜேத்
க்ராம் ஜனபதஸ்யார்த்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத்.

உன் சுய விருப்பத்தைக் குடும்பத்துக்காகவும், உன் குடும்பத்தை உன் ஊருக்காகவும், உன் ஊரை உன் நாட்டுக்காகவும் தியாகம் செய்யலாம். உன் ஆத்மாவுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யலாம்.   

16.
நாக்ஷரம் மந்த்ரஹீதம் நமூலம்நௌஷதிம்
அயோக்ய புருஷம் நாஸ்தி யோஜகஸ்த்ர துர்லப:

மந்திரமாகாச் சொல்லுமில்லை; மருந்தாகா வேருமில்லை; உபயோகமில்லா மனிதனுமில்லை; பொருத்தம் அறிந்து உபயோகிப்பவர்கள்தான் அரிது.

17.
தாரணாத் தர்மமித்யாஹு:தர்மோ தாரயதே ப்ராஜா:
யஸ்யாத் தாரணஸம்யுக்தம் ஸ தர்மோஅதிநிஷ்சய:

'தாரணா' எனும் சொல்லில் இருந்து பிறந்தது தர்மம்; தர்மமே சமுதாயத்தை இணைக்கிறது. ஆக, எந்த ஒன்று சமுதாயத்தைச் சேர்த்துப் பிணைக்குமோ அதெல்லாம் நிச்சயம் தர்மமே.

18.
ஆஹாரநித்ராபயமைதுனம் ச ஸாமான்யமேதத் பஷுபிர்நராணாம்
தர்மோ ஹி தேஷாம் அதிகோவிசேஷோ தர்மேண ஹீனா: பஷுபி: ஸமானா:

உணவு, உறக்கம், பயம், புணர்ச்சி இவை நான்கும் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் பொதுவானவை; தர்மத்தாலேயே மனிதன் மிருகத்தினின்றும் வேறுபடுகிறான்.

19.
ந வா அரே மைத்ரேயீ பத்யு: காமாய பதி: ப்ரியோ பவதி
ஆத்மனஸ்து காமாய பதி: ப்ரியோ பவதி

ஓ மைத்ரேயீ! ஒருவன் மனைவியால் நேசிக்கப்படுவதற்குக் காரணம் அவன் கணவன் என்பதால் அல்ல; அவன் உள்ளே இருக்கும் ஆத்மாவே  காரணம்.

20.
ஸத்யஸ்ய வசனம் ஷ்ரேய: ஸத்யாதபி ஹிதம்வதேத்
யத்பூதஹிதமத்யந்தம் ஓதத் ஸத்யம் மதம் மம

உண்மையே அறிவுறுத்தப்படுவது; ஆனாலும் எல்லோரின் நன்மையையும் உத்தேசித்தே அது சொல்லப்பட வேண்டும்.
என்னைப் பொருத்து பரந்த சமுதாயத்துக்கு எது நன்மை பயப்பதோ அதுவே உண்மை.

சுபாஷிதம்

சுபாஷிதம்

அம்ருத வசனம்

7 மார்., 2016

நூல் அறிமுகம்-- பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்

புகாரின். லெனின் குழுவிலிருந்த முக்கிய நபர். கம்யூனிச அரசை கட்டமைத்த ஒரு முக்கிய தலைவர். அதே கம்யூனிச அரசால் துரோகி என தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அறிவிக்கப்பட்டது. அக்கதையை ஒரு இழையாக வைத்து சுற்றி பல வித இழைகளல் பின்னப்பட்டது இக்கதை.
அரசியல் நாவல் என்றவுடன் தயங்கி தயங்கியே வாங்கினேன். அதுவும் ரஷ்ய நாட்டு தலைவரை பற்றிய கதை என்றவுடன் ஒரு மாதிரி செயற்கையாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு இருந்தது. (ஏதாவது மொழி பெயர்ப்பு புத்தகம் போல இருந்து வைத்தால் என்ன செய்வது என்ற எண்ணம்). ஜெயமோகன் என்னும் பெயரை நம்பி களத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை. கொஞ்சம் கூட தொய்வடையாமல், நடு இரவு தாண்டிய பின்னும் படிக்க வைத்த புத்தகம், இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை. எந்த புத்தகத்தையும் அடுத்தடுத்து படித்ததில்லை, இது என்னை மூன்று முறை தொடர்ச்சியாக படிக்க வைத்துவிட்டது.
வெகுநாட்களுக்கு நாவல் என்றால் தொடர்கதை என்பதுதான் எண்ணம். கல்கி, சுஜாதா இவர்களின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்கதைகள் என்பதால் அந்த எண்ணம் அப்படியே இருந்தது. படித்த ஒன்றிரண்டு ஜெயகாந்தனின் நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவையே. அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தவர் அசோகமித்திரன். அவரின் பதினெட்டாம் அட்சக்கோடு, இப்படியும் நாவல் எழுத முடியுமா என்று வியப்பை தந்தது, அடுத்தடுத்து அவரது கரைந்த நிழல்கள், ஒற்றன், தண்ணீர் எல்லாம் ஒவ்வொன்று ஒவ்வொரு வகை. நாவலின் பல சாத்தியங்களை உணர வைத்தது. இது மற்று மொரு சாத்தியம். நாவல்களில் விவாதங்கள் வருவதுண்டு, ஜெயகாந்தன் கதைகளில், இந்திரா பார்த்தசாரதி கதைகளில். ஆனால் அவை அனைத்தும் என் பார்வையில் வறண்டு போனவை. அதில் எவ்வித உயிர்ப்பும் இல்லை, ஒரு பிரச்சாரம். இந்த நாவல், அனைத்து சாத்தியங்களையும் கையாண்டுள்ளது, சிறுகதை, நாடகம், அபத்த நாடகம், கடிதம், கவிதை, கட்டுரை. அதற்கான யுக்தி அபாரம். உதவிக்கு பல உண்மை பாத்திரங்கள் ஜெயமோகன், ராமசாமி (சுந்தர ராமசாமி?). பல பாத்திரங்கள் பல உண்மை மனிதர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம், யாருக்கு தெரியும்.
எச்சரிக்கை : சற்றே பெரிய கட்டுரை. பெரிய புத்தகமல்லவா?
கம்யூனிசம் சார்ந்த கதைகள் என்று என் நினைவில் வருவது வெகு சில கதைகளே. ஜெயகாந்தனின் ஒரு கதை. ஒரு தவறான ஊழியனுக்காக போராடும் சங்கம், அதை எதிர்க்கும் சங்க ஊழியன். கடைசியில் அவனும் அவர்களுடன் சேர்ந்து கொள்வான். புலிநகக் கொன்றை. ஜெயகாந்தனின் கதையில் சில மெல்லிய விவாதங்கள் உண்டு. புலிநகக் கொன்றை லேசாக தொட்டு செல்லும். இந்த நாவல் அதை விவரித்து, விளக்கமாக பேசுகின்றது.
ஜெயமோகனின் பல கதைகளில் வருவது அடிப்படையான மானுட அறம் பற்றிய கேள்விகள். இதிலும் அவை இருக்கின்றன, நாவல் அதை பற்றி விரிவாக பேசுகின்றது. ஒரு அரசன் என்பவன் எப்படி நடந்து கொள்ள  வேண்டும் என்பதை பற்றி பல கதைகள், அறிவுரைகள் பாரதத்தில் இருக்கின்றன. அதில் பலவற்றை படித்தால் மிகவும் கொடூரமானதாக தோன்றும் ஆனால் அது அனைத்தும் கூறுவது தன் மக்களை அவன் நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த நீதியும் தன் நாட்டு மக்களை கொன்றழிக்க சொல்லவில்லை. ஆனால் தன் மக்களை கொன்றழித்த தலைவர்கள்தான் அதிகம். ஸ்டாலின், மாவோ, போல்பால்ட்.
கம்யூனிசம். கால் வைத்த இடங்களிலெல்லாம் அழிவை தந்த ஒரு சிந்தாந்தம். ஒன்றுக்கொன்று முரண்படும் சக்திகளால் முன்னேறி செல்லும் வரலாறு, ஒரு கட்டத்தில் தானாக புரட்சியில் சென்று முடியுமென்பது கம்யூனிச மதத்தின் வேத வாசகம். கம்யூனிசம் உண்டாக்கிய அழிவுகளை பற்றி ஏற்கனவே அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு நூலில் படித்திருக்கின்றேன்.  அதில் பல புள்ளிவிவரங்களுடன் கம்யூனிசம் உட்கொண்ட பலிகளை பற்றி எழுதியுருந்தார். இந்த நாவல் அப்படி பலி கொள்ளப்பட்ட பல கோடி உயிர்களின் ஒருவரை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது.
இந்த நாவல் கம்யூனிசத்தை அடிப்படையாக வைத்து அரசியல் பற்றி பேசும் நாவல். இதே களத்தில் வேறு பல இசங்களையும் வைக்கலாம். கண் முன் பல அழிவுகளை கண்டு வருகின்றோம். இலங்கையில், பாகிஸ்தானில், பங்களாதேஷில், ஆப்கானிஸ்தானில். ஆயுதம் பலம் பெறும் போது, மக்கள் அடிபடுகின்றார்கள்.
ரஷ்யாவில் நடந்தது கம்யூனிச புரட்சி; அது ராணுவ புரட்சி கம்யூனிச புரட்சியாக மாறியது; ராணுவ புரட்சி கம்யூனிச புரட்சியாக காட்டப்பட்டது; ராணுவ புரட்சியல்ல மக்கள் புரட்சி, அது கம்யூனிச புரட்சி; கம்யூனிச புரட்சி ஆனால அது மார்க்ஸ் சொன்ன புரட்சியல்ல.இது போல பல பாஷ்யங்கள் உண்டு. உண்மையான கம்யூனிசம் என்பது வரவேயில்லை, கம்யூனிச நாடுகள் அனைத்தும் அதை பரிசோதனை செய்து பார்த்துள்ளன அவரவர் வழியில். லெனினிசம், மார்க்ஸிசம், ஸ்டாலினிசம், மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் என்று பல வழிகள். சேர்ந்த இடம் ஒன்றே. உயிர்பலி.
அருணாச்சலம் ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் உப தலைவர். கே.கே. எம் தலைவர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கணக்கின் படி கே.கே.எம் இடத்திற்கு அருணாச்சலம் வருகின்றான். அதே சமயம் அவனுக்கு வீரபத்திரபிள்ளை என்பவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், நாடககங்கள் கிடைக்கின்றன. கட்சியிலிருந்து விரட்டப்பட்டதுமன்றி, கட்சி வரலாற்றிலிருந்தே அழிக்கப்பட்ட அவரின் எழுத்துகள் அருணாச்சலத்தை அலைகழித்து அவனையும் கட்சியிலிருந்து விரட்டுகின்றது.
அருணாச்சலம், வீரபத்ர பிள்ளையை கட்சி புறக்கணித்ததை ஜீரணிக்க முடியாமல் தவிக்கின்றான். ஒன்று இயல்பாக ஒருவனுக்கு தோன்றும் உணர்வு, அநீதி இழைக்கப்பட்ட மனிதனிடம் வரும் உணர்வு. இரண்டாவது அவனை கட்சியுடன் பிணைத்து கொண்டு, கட்சியின் பிரதிநிதியாக தன்னை நினைத்து கொள்வதால் வரும் குற்ற உணர்வு, அதோடு கே.கே.எம்ஐ கட்சியிலிருந்து விலக்கியதன் காரணமாக வரும் குற்ற உணர்வு. இவை அனைத்தும் அவனை மனப்பிறழ்வில் தள்ளுகின்றது. ஒரு கட்டத்தில் தன்னை வீரபத்ரபிள்ளையாகவே நினைக்க ஆரம்பிக்கின்றான்.
வீரபத்திரபிள்ளையை விரட்டியது அதே போல் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்ட புகாரின். புகாரின் நிழல் வீரபத்திர பிள்ளையையும், வீரபத்திர பிள்ளையின் நிழல் அருணாச்சலத்தையும் பின் தொடர்ந்து அவர்களை மனம் பிறழ செய்கின்றது.
அவதூறு. பலருக்கு வலிமையான ஆயுதம். ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கு முதன்மையான ஆயுதம். யாரையும், எதையும் விமர்சிப்பது மூலம் மட்டுமே அனைத்தையும் சாதித்து விட முடியும் என்ற நம்பிக்கை. படிக்கும் போதே உடனே ஒரு எதிர்மறை அலைகள் நம்மை வந்து சூழ்ந்து கொள்ளும். நாம் வாழும் உலகம் ஒரு நரகம், அனைவரும் அயோக்கியர்கள் என்ற எண்ணம் வலுப்படும். தரம் தாழ்ந்த விமர்சனங்கள், எதையும் எள்ளாலாக பேசி எதிராளியை அடிப்பது, முடிந்தால் அவர்களது தனிப்பட்ட வாழ்வு, சாதி, மதம், வீட்டில் வளர்க்கும் நாய் முதல் இழுத்து போட்டு அடிப்பது. அதுவே புகாரினையும், வீரபத்ர பிள்ளையையும், அருணாச்சலத்தையும் சாய்க்கின்றது.
பெரும்பாலான கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கு கம்யூனிச தத்துவம் முழுவதும் தெரியுமா? இருக்காது. அவர்களுக்கு இருப்பது மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற ஆசை. அதை கம்யூனிசத்தின் மூலம் செய்யலாம் என்ற நம்பிக்கை. கே.கே.எம் அந்த வகையில் ஒருவர். மலை மலையாக ஏறி, தொழிலாளர்களை இணைத்து அவர்களின் நலனுக்காக அமைத்த சங்கம், இன்று அவர்களுக்கு ஒரு அடியாள் போலவும், அரசியல் பேரம் பேச உதவும் ஒரு இயக்கமாகவும் இருக்கின்றது. இதை மாற்ற முயலும் போதே அவருக்கு காலம் மாறியது தெரிந்து கடைசியில் பக்தியில் விழுகின்றார். அருணாச்சலமும் அங்கே சேர்கின்றான், வீரபத்ர பிள்ளையின் கதையில் வரும் புகாரினும் அங்கேயே சேர்கின்றார்.
பெண்கள் நடத்தும் புரட்சி பற்றி கனவு காண்கின்றான் அருணாச்சலம், பெண்கள் கையில் அதிகாரம் இருந்தால் கனிவு இருக்கும் என்று நினைக்கின்றான். இக்கதையில் பெண்கள் மிக குறைவு. அருணாச்சலத்தின் மனைவி. மிகவும் எளிமையான பெண். உண்மையில் அருணாச்சலத்தின் வெற்றிகள், சிந்தாந்தங்கள் எல்லாம் அந்த எளிமை முன் தோற்று விடுகின்றன. அவளே அவனின் தோல்வியிலிருந்து அவனை மீட்டு வருகின்றாள். அன்னா, புகாரினின் மனைவி. உண்மை கதாபாத்திரம். எளிமையுடன், வலிமை. பல ஆண்டுகாலம் சைபீரிய வதை முகாம்களில் வதைபட்டும், தன் மனநிலையை தவற விடாது, புகாரினின் வாக்குமூலத்தை உலகிற்கு தந்த பெண். அவள் புகாரினை வரலாற்றிற்கு மீட்டு தருகின்றாள். உண்மையில் இவர்கள்தான் வலிமையானவர்கள்.
மக்களுக்காக உண்மையில் உழைக்க நினைத்து கட்சியில் சேர்பவர்கள் ஒரு வகையில் செயல்பட்டுகொண்டுதான் இருப்பார்கள். ஒரு கட்டத்திற்கு பின், அவர்கள் கட்சி சட்டத்திற்குள் மாட்டி கொண்டு, அதையும் சேர்த்து காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். கட்சி அரசியல். இன்றும் பல பழைய ஆட்கள், கட்சி மாறி ஓட்டளிக்க மாட்டார்கள், காரணம் அவர்களது மனமே அதை ஒரு வீழ்ச்சியாக பார்க்கும், அவர்களின் தோல்வியாக பார்க்கும். அவர்களால் அதை விட்டு விட முடியாது, அப்படி செய்தால் அவர்களின் இது நாள் வரையிலான உழைப்பை அவர்களே வீணடித்தது போலத்தான்.அதை ஒத்துகொள்ள தைரியமில்லாதவர்கள் அதன் தலைவர்கள். அதற்கு ஒரு தைரியமும், அற உணர்வும் வேண்டும். அது காந்திக்கு மட்டுமே இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
காந்தியை பற்றி பலர் திட்டுவதுண்டு, கம்யூனிஸ்டுகளூக்கும் அதிக மரியாதை கிடையாது என்றுதான் நினைக்கின்றேன். எனக்கும் கூட அவர் மிகவும் சாத்வீக வழியில் சென்றார், இன்றைய உலகிற்கு அது சரிப்பட்டு வராது என்று நினைப்பு ஒரு ஓரத்தில் உண்டு. மிகவும் மெதுவாக நடக்கும், ஆனால் எந்த பின்விளைவையும் தராத ஒன்று அவர் வழிமுறை. ஒவ்வொரு தனிமனிதனுடனும் உரையாடுவது அவர் பாணி, தனி மனிதனின் ஒழுக்கமே ஒரு சமூகத்தின் ஒழுக்கமாக மாறும். அதையே அவர் முயற்சித்தார். ஒரு வகையில் அதுதான் இந்திய மக்களை இன்னும் கொஞ்சம் மனிதத்தன்மையுடன் வைத்திருக்கின்றது. அவர் விட்டதை செய்யாத குற்றம் அவருடையதல்ல. ஆனால் கம்யூனிசம் தனி மனிதன் என்பதை கணக்கில் கொண்டதாகவே தோன்றவில்லை. அதன் விளைவு அதன் தோல்வி.
ரஷ்ய புரட்சியின் முதல் அறப்பிறழ்வு, ஆரம்பத்திலேயே துவங்கிவிட்டது. ஜார் குடும்பத்தை கொன்றதிலேயே அவர்களின் மனித உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. நாயை கூட கொல்லும் அந்த உணர்வு, அவர்களை எதையும் செய்ய வைத்துவிட்டது. ஹிட்லரை போல. குற்ற உணர்வு என்பதே இல்லாமல். ஜார் மன்னர் எதிரி என்றால், அவரது நாய் மேல் வர்க்க நாய் போல. இந்த ஆரம்பமே, கொத்து கொத்தாக மனிதர்கள் நாற்றங்காலில் இருந்து பிடுங்கி நடுவது போல, எங்கிருந்து எங்கேயோ மாற்றி விளையாடினார்கள். குழந்தைகளையும் கட்டாய உழைப்பு முகாமில் வைத்து வதைத்தனர்.
புகாரினும் இந்த ஆட்டத்தை ஆடியவரே. தோற்றவர். ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட் ட்ராட்டஸ்கியை கொன்ற அதே பனிக்கோடாரி, இவருக்கு தூக்கு கயிறாக மாறியது. ஆனால், புகாரின் இறப்பதற்கு முன் தாங்கள் உண்டாக்கிய அழிவு எத்தகையது என்பதை உணர்ந்து கொண்டார். தனிமனிதர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு, அவர்களை ஒரு இயந்திரம் போல இயக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் முன் பல கோடி பலிகள். அதை மாற்ற முயற்சித்த போது, காலம் கடந்து அவருக்கு செக் மேட்.
புகாரினின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சில சிறுகதைகள் மூலம் காட்டுகின்றார். புகாரின் பனியில் எழுந்து மீட்பரை தேடி போகும் காட்சி மனதை மிகவும் சங்கட படுத்திவிட்டது. அக்காட்சியில் வரும் குழந்தைகள். குழந்தைகள் மட்டுமே வன்மம் இல்லாதவர்கள். கடைசியில் தியாகத்தை பற்றி பேசும் கிறிஸ்த்து. காந்தியத்துடன் இணையும் ஒரு புள்ளி.
அன்னா, புகாரினின் மனைவி.இரண்டு நாடகங்கள் மூலம் அவளது கதை. தல்ஸ்தோய் பற்றி ஒரு நாடகம்.
பல சித்தாந்த விவாதங்கள் எல்லாம் சுவாரஸ்யமானவை. குறிப்பாக எனக்கு யாரோ மேடை மீது ஏறி நின்று பேசுவது போல தோன்றவில்லை. ஒரு உரையாடலாகவே தோன்றியது. மானிட அறம், அரசியல் அறம் பற்றி பல விவாதங்கள். ரஷ்யாவில் கம்யூனிசத்தின் பெயரால் பல கொலைகள் நடந்து கொண்டிருக்கும் போதுன் இங்கு ரஷ்யாவில் பொன்னுலகின் கட்டுமானம் நடக்கின்றது என்று தெரிந்தே மக்களை ஏமாற்றியவர்கள், உண்மை ரஷ்யாவிலிருந்து வந்த பின்னும் அவர்கள் முன்னர் அவர்கள் அளந்துவிட்ட பொய்களை நம்பி ஏமாந்தவர்களுக்கு அளிக்கும் பதிலென்ன? கம்யூனிஸம் கண்ட புரட்சி என்பதெல்லாம் இனி நடக்காத கதை, மிஞ்சி மிஞ்சி போனால் பிரபுவுடன் சேர்ந்து புரட்சி போராட்டம் செய்யலாம். இருந்தும் இன்றும் அக்கதை சொல்லி ஏமாற்றுபவர்களை என்ன செய்ய.
எதையும் சித்தாந்தத்தின் படி நியாயாமாக்கிவிட முடியும். தர்க்கம். தர்க்கரீதியாக எப்படியாவது ஒன்றை உண்மை என்று நிறுவிவிடலாம். ஸ்டாலின் செய்த கொலைகளுக்கும், அவர் தரப்பில் ஒரு நியாயம், தர்க்கம் அமைந்திருக்கின்றது.
அருணாச்சலத்தின் மனபிறழ்வு காட்சிகள், அந்த அபத்த நாடகம். கதையில் மிக வேகமான பகுதி. அனைத்தையும் வேடிக்கையாக்கி, அதனூடாக பல தகவல்களை சொல்கின்றது. கம்யூனிஸ்டுகளுக்கும் பிடிக்கலாம், பிராமணர்களை பல இடங்களில் கிண்டல் செய்கின்றது. அது ஒன்று போதுமல்லவா?
பல இடங்களில் அவரின் குசும்பு எட்டி பார்க்கின்றது. "பிள்ளைமாருங்க உளுந்த கஞ்சி குடிச்சாலே போதும்", "திகசி எப்படி பழக்கம், கார்டு போடுவாருங்க, 86 கார்டு போட்டிருக்காரு. அத்தன கவித எழுதியிருக்கீங்களா? அவ்வளவுதாங்க பிரசுரமாகியிருக்கு"
தொழிலாளர்களுக்கு உரிமையை பெற்று தர உண்டான சங்கத்தின் நோக்கம் இன்றும் அப்படியே இருக்கின்றதா? ஒரு தொழிலாளிக்கு வக்கீல் வேலை செய்வது மட்டும்தான் சங்கமா? தொழிலாளிகள் வேறு சங்கங்களுக்கு போவதை தடுக்க நினைக்கும் தலைவர்கள், சங்கத்திற்குள்ளும் மறைமுகமாக உள்ளோடும் சாதி அரசியல், எதிர்கால கணக்கைவிட, தொழிலாளர்களை தக்க வைத்து கொள்வதே முக்கியம் என்று நினைத்து எடுக்கும் முடிவுகள், தெரிந்தே தொழிலாளர்களின் தவறுகளை ஆதரிப்பது என்று நடக்கும் சங்களின் அடிப்படை என்ன?
புரட்சி, போராட்டம் எது என்றாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவிகள். அவர்களுக்கு என்ன மதிப்பு? அப்பாவிகளுடன் சேர்த்து நினைக்கப்பட வேண்டிய ஜீவன்கள், போர்வீரர்கள். ஒரு மாபெரும் இயந்திரத்தின் ஒரு பகுதியாக எதற்காக செய்கின்றோம் என்பது கூட தெரியாமல், இயக்கப்படும் ஒரு சிறிய இயந்திர துண்டு. செம்படை வீரனுக்கு பொன்னுலக கனவு என்பது ஒரு கானல் நீரென்று அறியும் போதும், புரட்சியின் தோல்வி கண்முன் நிகழும் போது அவனின் உழைப்பிற்கு என்ன மரியாதை, விட்ட உயிர்களுக்கு என்ன மதிப்பு. வரலாற்றிற்கும் தனி மனிதனுக்கும் என்ன தொடர்பு, வரலாற்றின் வழி மனிதன் செல்கின்றானா? வரலற்றை அவன் உருவாக்குகின்றானா?
அரசியலில் உள்ளவனின் அறம் என்பது என்ன? தனிமனிதனாக அவன் செய்யக்கூடியது என்ன, தனிமனித தர்மம் என்பது அரசியலில் வந்த உடன் மாறக்கூடுமா? தனிமனித அறமும் அரசியல் தர்மமும் முரண்படும் போது ஒருவன் என்ன செய்யக்கூடும்?
பல கேள்விகள்.
பல நாட்களாக ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பிலிருந்து மாறி, இப்போது இங்கே கிடைக்கின்றது. விலை ஐநாக்ஸில் முதல் நாள் ரஜினி பட டிக்கெட் விலையை விட கொஞ்சம் குறைவுதான்.

நூல் அறிமுகம்

பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிசம்
ஊரில் சிறுவனாகத் திரிந்து கொண்டிருக்கும் போது, தெருமுனையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்தது, பக்கத்து வீட்டு அண்ணன், "டேய் வர்றியா கம்யூனிஸ்ட் கூட்டத்துல போய கல்லெறியலாம்" என்று விளையாட்டிற்குக் கேட்டுவைக்க, அன்று யாரோ நிஜமாகவே கல்லெறிந்து கலவரம் ஆனது. அப்படித்தான் கம்யூனிசம் அறிமுகம். அவர்களின் பெருங்கூட்டம் சைக்கிள்காரர்களுக்குக் கூட தொந்தரவின்றி அடிக்கடி நடக்கும். இவர்களை விடத் தீவிர கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் எங்கள் கோவில் சுவரில், மகாபாரத்தத்தைக் கொளுத்துவோம், ராமாயணத்தை எரிப்போம் என்று வந்தார்கள். நானும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஏதாவது நடக்குமா என்று காத்திருப்பேன். ஒன்றும் நடந்ததாக நினைவில்லை.

பள்ளியில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்த நினைவு. பரிட்சைக்குப் படித்ததால் அப்போதே மறந்துவிட்டது. ஓரளவிற்கு அறிவு வந்ததும், கம்யூனிஸ்டுகள் மீது ஒரு மரியாதை வந்தது. காரணம் அவர்கள் மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள் என்பதும், தைரியமாக இறங்கி போராடுகின்றார்கள் என்பதும். தலைவர்கள் மீது எக்காலத்திலும் எந்த மரியாதையும் கிடையாது. அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறி.

இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது ஏகப்பட்ட புரட்சியாளர்கள் இருப்பது. அவர்களுக்கு கீ போர்ட் இருந்தால் போதும். நாலுவரி கோபமாக எழுதிவிட்டு, புரட்சி வாழ்க என்றோ அல்லது புரட்சியே இதற்கு தீர்வு என்று கூறினால் போதுமானது, முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும். யாரையும் எவரையும் ஏதாவது ஒரு வகையில் வர்க்க எதிரியாளர்களாக்கி விடும் திறமை உண்மையில் மெச்சத்தகுந்தது. ஏதோ ஒரு வகையில் அவர்களால் ஒரு மரத்தைக் கூட வர்க்க எதிரி என்று நிரூபிக்க முடியும். இவர்களைப் படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிதான் நினைவில் வருகின்றார். அவரால் முடிந்தது திட்டுவது. அனைவரையும் திட்டுவார், என்ன செய்தாலும் திட்டுவார். அதுதான் இதுவும்.

இதற்கு இணையான நகைச்சுவையை அளிப்பவர்கள், இவர்களுடன் மல்லுகட்டும் கம்யூனிச எதிர்ப்பு வீரர்கள். கைய பிடிச்சு இழுத்தியா கதையாக, இருவரும் மாறி மாறி சம்பந்தமில்லாமல் பேசிக்கொள்வதைப் படிப்பதுதான் ஒரு காலத்தில் எனக்குப் பெரிய பொழுது போக்காய் இருந்தது. இருவருக்கும் தெரியும் அடுத்தவரை மாற்ற முடியாது என்று இருந்தும் விடாமல் பேசுவது, சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்பது என்பது, படித்தால் தெரியும் அதன் சுவாரஸ்யம். கடைசியில் ஒருவரி ஒருவர் கிண்டலாகவும், கேலியாகவும் வசைபாடுவதில் முடியும். கேள்வி கேட்டவனை பர்சனலாக திட்டுவதே வாதத்திறமை, வெற்றி என்பதே இவர்களின் முடிவு.

இவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் ஒரு விஷயம் கம்யூனிஸ்ட் தலைவர்களின் மறுபக்கம், அவர்களின் படுகொலைகள். ஒருவர் ஸ்டாலின் ஒரு இரும்பு மனிதர் என்றால், மற்றொருவர் வந்து அவரின் மறுபக்கம் என்று பட்டியலிடுவார். அவர் மீண்டும் வந்து அது புளுகு என்று நம்மைத் தெளியவைப்பார். இப்படி மாறி மாறி உண்மைகளைக் கூறி நம்மைக் குழப்புவார்கள், கடைசி வரை உண்மை தெரியாது. முழுவதும் எனக்குத் தெரியவைத்தது இப்புத்தகம். படித்து முடித்த பின் தோன்றியது நல்ல வேளை இவர்கள் நமது நாட்டு ஏழைகளை ரட்சிக்கப் புறப்படவில்லை என்பதுதான். ஹிட்லரின் படுகொலைகளைக் கூட சாதரணமாக்கிய படுகொலைகளைத் தந்தது கம்யூனிசம் என்பதே இப்புத்தகம் காட்டும் பிம்பம்.

அரவிந்தன் நீலகண்டனின் எழுத்துக்களை பல ஆண்டுகளாக படித்து வருகின்றேன். திண்ணையில் அவர் எழுதியது, இப்போது தமிழ் ஹிந்துவில். மதச்சார்பின்மை என்ற பெயரில் போகிற போக்கில் ஆளாளுக்கு ஒரு தர்ம அடி தந்துவிட்டும் போகும் இடத்தில், இவரை போன்ற ஒருவர் தேவை. சரியான ஆதாரங்களுடன், தர்க்க ரீதியாக ஒரு கருத்தை தெரிவிக்கும் இவரது படிப்பின் விசாலம் எப்போது என்னை வியக்க வைப்பது. இப்புத்தகத்தின் கடைசியில் தரப்பட்டுள்ள லிஸ்டை பார்த்தாலே தெரியும்.

அரவிந்தன் நீலகண்டன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதால் இப்புத்தகம் அவரின் புளுகு மூட்டை என்று ஒற்றை அடியில் இதை தாண்டி சென்றுவிடுவார்கள். ஆச்சர்யம் இணையத்தில் எவனோ எதோ சொன்னான் என்று வரிந்து கட்டி கொண்டு பாயும் பலர், இப்புத்தகத்தை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. தேடி தேடி பார்த்தேன், இதை ஆதாரப்பூர்வமாக மறுத்து ஒரு வரி கூட இல்லை. காரணம் அ. நீ காட்டும் அனைத்து வரிகளும் அதிகாரபூர்வ, கம்யூனிச தலைவர்களின் வரிகள், கம்யூனிச அரசின் அறிக்கைகள், கடிதங்கள். எப்படி மறுக்க முடியும் என்று விட்டு விட்டார்களோ என்னவோ. இது உண்மை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கம்யூனிசத்தின் பிதாமகர்களில் ஆரம்பித்து இந்திய கம்யூனிச தலைவர்கள் வரை செல்கின்றது. மார்க்ஸின் மூல கம்யூனிச தத்துவமான முரணியக்கத்தின் மூல தத்துவம், அதன் வளர்ச்சி. மார்க்ஸ் / ஏங்கல்ஸ் அவர்களின் ஊருக்கு உபதேசத்திற்கும், சொந்த சோகக்கதைக்குமான முரணியக்கம்!. தத்துவத்தை வளைப்பது அங்கே ஆரம்பித்துவிட்டது.

ரஷ்யாவின் ஜார் மன்னர்களுக்கெதிரான விவசாயிகளின் புரட்சி, லெனின் அப்புரட்சியை அறுவடை செய்தது, பின்னர் அப்புரட்சியில் கம்யூனிசத்தை நுழைத்தது. லெனின் நடத்திய படுகொலைகள். ஜார் மன்னரின் குழந்தைகளைக் கூட கொன்றது. ஸ்டாலின் - லெனின் போர், ஸ்டாலினின் ஆதிக்கம், அவரின் படுகொலைகள். பஞ்சம். பஞ்சத்திற்கு அமெரிக்கவிடம் பிச்சை. ஹிட்லருடன் போர் ஒப்பந்தம். ஹிட்லரின் ஒப்பந்த மீறல். செம்படைகள் செய்த படுகொலைகள், மறைக்கப்பட்ட இடுகுழிகள். விவசாயிகளின் படுகொலைகள், வலுக்கட்டாயமாக அவர்களை இடப்பெயர்ச்சி செய்தது. மனித உழைப்பை சுரண்டி வளர்ச்சியை காட்டியது. அதன் பின்னால் இறந்த லட்சக்கணக்கான மக்கள். மாவோவின் ரத்த வெறியாட்டம். கலாச்சார புரட்சி என்று சாதுக்களை கொல்வது. விவசாயிகளை தொழிலாளர்களாக மாற்றியது. மீண்டும் பஞ்சம். காஸ்ட்ரோ ஒரு கம்யூனிஸ்டா? சேவின் மறுபக்கம், இந்திய புரட்சியாளர்கள் அந்நிய விசுவாசம், துரோகம்.

அங்கங்கு நகைச்சுவையும் உள்ளது. சீனாவில் குருவிகளை கொன்றது பின்னர் 2000 குருவிகளை இறக்குமதி செய்தது.

இதையும் அவர்கள் ஒருவரியில் கடந்து சென்று விடுவார்கள், இவர்கள் எல்லாம் உண்மையான கம்யூனிஸ்டுகளல்ல, போலிகள். அந்த குழுவிற்கு அவர்களே உண்மையான கம்யூனிஸ்டுகள், மற்றவர்கள் போலிகள். அவர்கள் கையில் ஆட்சி வந்தால் தேனும் பாலும் ஓடும். ஆனால் உண்மை எங்கெல்லாம் கம்யூனிசத்தின் கையில் அதிகாரம் சென்றதோ அங்கெல்லாம் ரத்த ஆறு ஓடி, பிணங்கள்தான் சேர்ந்துள்ளன என்று முடிக்கின்றார்.

கேட்கலாம், எப்படி அ.நீ கூறுவதை அப்படியே ஏற்று கொள்ள முடியும் என்று. ஒன்றும் தவறில்லை. இன்று நம் கலாசாரத்தையும், நமது புராணங்களையும், இதிகாசங்களையும், வரலாற்றையும் யாரோ எப்போதோ சொன்ன ஒன்றை வைத்துக் கொண்டு இத்தோழர்கள் தூற்றும் போது, நாமும் இதை அப்படியே நம்புவதில் தவறில்லை. மேலும் அ.நீ ஒரு பெரிய புத்தக லிஸ்டையே தந்துள்ளார். வேண்டுமானால் படித்துக் கொள்ளலாம். பிற்சேர்க்கையாக ஏகப்பட்ட தரவுகள். அதனால்தான் யாரும் மறுக்கவில்லை போல.

கிழக்கு பதிப்பகம் - இங்கே சென்று வாங்கலாம்.

http://rengasubramani.blogspot.in/2014/01/blog-post.html?m=1

தேசபக்தியே தெய்வபக்தி

சிவாஜி மன்னா நின் நினைவு

பாரத்தாயை பணிந்து வணங்கும்

விஜயபாரதம், தேசிய வார இதழ்

தசவதாரம்

விஜயபாரதம், தேசிய வார இதழ்

அம்ருதவசனம்

அம்ருதவசனம்

அம்ருதவசனம்

அம்ருதவசனம்

5 மார்., 2016

பஞ்ச சிவராத்திரிகள்!

வி.ராம்ஜி

மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மகா சிவராத்திரி புண்ணியம் நிறைந்த பலன்களை வழங்கக் கூடிய மகத்துவம் வாய்ந்தது!

இன்னும் சில சிவராத்திரிகள் உண்டு.

நித்ய சிவராத்திரி :  பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறைச் சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி. என்று அழைக்கப்படுகிறது.
மாத சிவராத்திரி : மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசி நாளே  மாத சிவராத்திரி எனப்படுகிறது.

பட்ச சிவராத்திரி : தை மாதத்தில், தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவபூஜை செய்தல் பட்ச சிவராத்திரி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

யோக சிவராத்திரி: சோம வாரமும் அதாவது திங்கட்கிழமையும் அமாவாசையும் அறுபது நாழிகை இருந்தால், அன்றைய தினம் யோக சிவராத்திரி எனப்படுகிறது.
இந்த ஐந்து சிவராத்திரிகளிலும் விரதம் மேற்கொண்டால், அடுத்த பிறவி இல்லை என்கிறது புராணம்.

அனைத்து விரதமும் மேற்கொள்ள முடியாதவர்கள், மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்பதும் விடிய விடிய சிவ தரிசனம் செய்வதும் முக்தியைத் தந்தருளும் என்பது உறுதி!

MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com

4 மார்., 2016

சுபாஷிதம்

சிவனே போற்றி! சிவராத்திரியே போற்றி!

வி.ராம்ஜி

மகா சிவராத்திரி! ஆதியும் இல்லாத அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியனாய்,  பிரமாண்டமாக லிங்க வடிவெடுத்து வெளிப்பட்ட நாளே மகா சிவராத்திரி. மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் அற்புதமான நாள் இது.

உலக மக்கள் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக, சிவனாரையும் உமையவளையும் வணங்கித் தொழவேண்டிய தினம். உலகம்மை, உலக மக்களுக்காக, சிவனாரை பூஜித்த திருநாள் இது!

பிரபஞ்சத்துக்கு பிரளயம் மிகவும் அவசியம். அப்போது உலகம், சிவனாரிடம் ஒடுங்கும். அப்படிப் பிரளய நாளில்... ஒடுங்கும் தருணமே சிவராத்திரி என்கிறது புராணம். அந்தநாளில் ஈசனைத் தவிர எவரும் இல்லை. அதேநேரம் சிவனாரில் பாதியான சக்தியும் உடனிருந்தாள் என்பதாகத் தெரிவிக்கிறது புராணம்!
இந்த நாளில்... முறைப்படி விரதம் இருந்து சிவனாரை வழிபடுவோம். சகல வளங்களையும் பெறுவோம்!

'இந்த நாளில் விரதம் இருந்து, விடிய விடிய கண் விழித்து, நான்கு கால பூஜையையும் தரிசிப்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி சிவனாரிடம் கேட்க, 'அப்படியே ஆகட்டும்' என வரம் தந்தருளினார் ஈசன்! எனவே, மற்ற நாளை விட, மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தந்தருளும் என்பது ஐதீகம்!

  சிவராத்திரி மகிமையை சிவனாரே நந்தியம்பெருமானுக்கு உபதேசித்தார். பின்னர் நந்திதேவர் சிவகணங்கள் அனைவருக்கும் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்குமாக உபதேசித்தார்.

இத்தனை மகிமைகள் கொண்ட சிவராத்திரி விரதத்தை, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு, ஆதிசேஷன், ஸ்ரீசரஸ்வதி முதலான கடவுளரும் மேற்கொண்டனர். சிவ தரிசனம் செய்து சிவனருளைப் பெற்றனர்!

MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 9865442911 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com