சச்சீந்திரநாத் சன்யால் காசியில் வசித்து வந்த வங்காளி. விவேகானந்தர் அரவிந்தர் வழியை பின்பற்றிய புரட்சியாளர். ஆன்மீகமும் புரட்சியும் ஒன்றே என்று எண்ணியவர். 1912-18ஆம் ஆண்டுகளில்'அனுசீலன் சமிதி' என்ற புரட்சி இயக்கக் கிளையை உத்திரப் பிரதேசத்தில் தொடங்கி வைத்தவர்.
தேசபக்த வீரரான ராக்ஷ் பிகாரி போஸின் சீடர்.
1919ல் முதல் உலகப் போரில் பிரிட்டன் வெற்றி கண்டதை அடுத்து இந்திய சிறையிலிருந்த அரசியல் கைதிகள் பலர் விடுதல் செய்யப்பட்டனர். அவர்களில் சன்யாலும் ஒருவர். 'பந்தி ஜீவன்' என்ற அவரது நூல் வங்காள இளைஞர் அனைவராலும் விரும்பி படிக்கப்பட்ட புரட்சி இலக்கியம்.
இளைஞர்களின் மனக் குமுறலை அறிந்த சன்யால் 'ஹிந்துஸ்தான் குடியரசுச் சங்கம்' (HINDUSTAN REPUBLIC ASSOCIATION) என்ற அமைப்பை காசியில் தொடங்கி பல துடிப்பான இளைஞர்களையும், மாணவர்களையும் தயார்படுத்தினார்.
அதே சமயம் வங்கப் புரட்சியாளர் இருவர் காசிக்கு வந்து 'கல்யாண் ஆசிரமம்' என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தை நிறுவி புரட்சி இயக்கப் பணிகளை நடத்தி வந்தனர்.
அவர்கள் மன்மதநாத் குப்தா, அவரது தம்பி மன்மோகன் குப்தா. மேலும் அதில் ராம்நாத் பிஸ்மில், அக்ஷ்பகுல்லாகான், போன்றோரும் இருந்தனர். அதில் 20 வயது சந்திரசேகர ஆசாத்தும் உண்டு.
'புரட்சிக்காரன்' என்ற 4 பக்க பத்திரைக்கை ஒன்றை ரகசியமாக அச்சடித்து நாடெங்கும் அனுப்பினார் சன்யால். அதில்,
"இந்தியாவின் வீர இளைஞர்களே! சுதந்திரம் என்பது சும்மா வராது. புதிதாக ஒரு குழந்தையைப் பெற தாய் மரண வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும்."
"புதிய சுதந்திர நாடு பிறக்க வேண்டுமெனில் அதற்கு விலையாக இரத்தம் சிந்தியே ஆக வேண்டும். அவசியமானால் நமது இன்னுயிரையும் தர வேண்டும்."
"அகிம்சையும், கோழைத்தனமும் நிச்சயம் கோழைத்தனத்தை பெற்றுத் தராது. வீரமும் தியாகமுமே பெற்றுத் தரும்."
"புரட்சிக் காரர்கள் வெறும் பயங்கரவாதிகளோ குழப்பக்காரர்களோ அல்ல. சுயநலம் அற்ற தேசநலம் ஒன்றையே பெரிதாக மதிக்கும் ஆண்களும், பெண்களுமாக சில ஆயிரம் பேர் தங்கள் உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கிவிட்டால் வலிமை மிக்க ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை ஒரு நொடியில் வங்கக் கடலில் தூக்கி எறிந்து விடலாம்"
மன்மதநாத் குப்தாவின் முயற்சியால் கல்யாண் ஆசிரம புரட்சியாளர்களும், ஹிந்துஸ்தான் குடியரசு சங்கத்தினரும் சன்யால் தலையில் ஒன்றாக செயல்பட முடிவெடுத்தனர். உத்திர பிரதேசத்தில் மட்டும் 23 கிளைகள் தொடங்கப்பட்டன.
புரட்சி வேலைகள் அதிகரிக்க அதிகரிக்க பணம் தேவைப்பட்டது. அரசாங்க பணத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது. 09-08-1925ல் லக்னோவிலிருந்து சகாரன்பூர் ஊருக்கு செல்லும் 8 வது பாசஞ்சர் வண்டியில் கொண்டு வரப்படும் பணத்தை கைப்பற்ற திட்டமிடப்பட்டது. வெற்றிகரமாக பணமும் கைப்பற்றப்பட்டது.
20-09-1925ல் கிட்டத்தட்ட 40 நாட்கள் கழித்து சன்யால், மன்மதநாத் குப்தா, ராம்பிரசாத் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்திரசேகர ஆசாத், அக்ஷ்பகுல்லாகான் ஆகியோர் தலைமறைவாயினர்.
இவர்கள் மேல் மேலும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. வழக்கு நடக்கும்போதே ஆசாத் தவிர இதர புரட்சியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
புரட்சியாளர்கள் சார்பில் பண்டிட் கோவிந்த வல்லப் பந்த் (பிற்காலத்தில் மத்திய உள்துறை அமைச்சர்), சி.பி.குப்தா (பிற்காலத்தில் உ.பி. முதல்வர்), கலிக்குஸ்ஸமான் போன்றோர் ஆஜராயினர்.
18 மாதங்களாக நடந்த இவ்வழக்கில் 06-04-1927ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அக்ஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங், ராஜேந்திரநாத் லஹரி ஆகிய நால்வர்க்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
மன்மதநாத் குப்தாவிற்கு 14 ஆண்டு சிறை, சன்யால், ஜோகேஸ் சந்திர சட்டர்ஜி உள்ளிட்ட ஐவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
17-12-1927ல் ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி ஆகியோர் கோரக்பூர் சிறையிலும், 19-12-1927ல் அலகாபாத் சிறையில் தாக்கூர் ரோசன் சிங்கும், பைசாபாத் சிறையில் அக்ஷ்பகுல்லாகானும் தூக்கிலிடப்பட்டனர்.
அக்ஷ்பகுல்லாகான் தான் தூக்கிலிடப்படும்போது ஒரு கையில் புனித நூலான திருக்குரானையும் தனது புரட்சியாள நண்பர்கள் நினைவாக ஒரு கையில் பகவத் கீதையையும் வைத்திருந்தார்.
ஆர்.எஸ்.எஸ்ன் பாலபாரதி வெளியிட்ட 'அக்ஷ்பகுல்லாகானின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.
"இந்த பத்தான் தேசபக்தர், தூக்குக் கயிறை, வாயில் அல்லாவின் நாமத்துடன் முத்தமிட்டார். இரும்பு உடலும், எஃகு உறுதியும் கொண்ட இந்த இளைஞர் தன் அனைத்தையும் தேச விடுதலைக்காக அர்ப்பணித்தார்.
'இறைவன் எனக்கு நீதி அளிப்பான்' என அமைதியாகக் கூறிய அந்த இளைஞனின் தெளிவான பிரார்த்தனை தூக்கு மேடையில் தெளிவாக ஒலித்தது. 'லா இல்லாஹி இல் அல்லாஹ், முகமது உர் ரசூல் அல்லா'. தூக்கு கயிறு இறுக்கப்பட்டது. அக்ஷ்பகுல்லாகான் என்றும் அழியா மகாத்மாக்களின் வரிசையில் ஒருவரானார்