ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
ஹிந்துத்துவம் மத நம்பிக்கை அடிப்படையில் அமைந்ததா?
ஹிந்துத்துவம் மத நம்பிக்கை அடிப்படையில் அமைந்ததா?
ஹிந்துத்துவம் என்பது மத நம்பிக்கையைச் சார்ந்தது அல்ல. நீங்கள் எந்தக் கடவுளையும் வழிபடலாம் அல்லது கடவுள் மறுப்பாளராகவே இருக்கலாம். ஆனால், நீங்கள் சக மனிதர்களின் மாறுபடும் நம்பிக்கையை, கோட்பாட்டை மரியாதையையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் நீங்கள் ஹிந்துத்தன்மையுடன் விளங்குகிறீர்கள் என்றுதான் பொருள். உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் இத்தகைய பரந்த மனப்பாமை, பண்பாட்டின் ஓர் அங்கமாகவும் வரலாற்றுப் பூர்வமாகவும் விளங்கி வந்திருக்கிறது. இதுதான் ஹிந்துத்துவம்.
இந்த சிருஷ்டியின் ரகசியம்தான் என்ன?
உண்மையிலே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதுதானா எனக் கேள்வி எழுப்புகிறது, ரிக்வேதத்தின் நாஸதீய ஸுக்தம். இது ஹிந்துத்துவம்.
ஜாபாலி என்ற முனிவர் கடவுளின் அவதாரமாக கருதப்படும் ராமரிடமே கடவுள் மறுப்புக்கோட்பாட்டு வாதங்களைக் கொண்டு விவாதித்தார். இதுவும் ஹிந்துத்துவம். சாருவாகனின் லோகாயாதமும் ஹிந்துத்துவம். சாங்கியத்தின் இறை மறுப்பும் ஹிந்துத்துவமே. சித்தர்களின் சடங்கியல் மறுப்பும் ஹிந்துத் துவமே. ஏன், ஹிந்துத்துவத்தை முன்வைத்த வீரசாவர்க்கரே ஒரு கடவுள் மறுப்பாளர்தாம்.
குண்டலினியை ஹிந்து பண்பாட்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக ஹிந்து மகா சபையின் கொடியில் காட்டிய வீர சாவர்க்கர், அதே குண்டலினி நரம்பியல் உளவியல் ரீதியில் அறிவியல் பூர்வமாக அணுகப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஹிந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதா?
சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதென்பது ஹிந்துத்துவத்தின் மரபிலேயே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளாக சொந்த நாடு இல்லாமல் உலகமெங்கும் அகதிகளாக, பல கஷ்டங்களை அனுபவித்த யூதர்கள், மீண்டும் உதயமான இஸ்ரேலில் கூடியபோது, ஒவ்வொரு நாட்டிலும் தாங்கள் பட்ட இன்னல்களை எடுத்துச் சொன்னார்கள். ஆனால், இந்தியாவில் இருந்து போன யூதர்கள் மட்டுமே, தாங்கள் எவ்விதக் கஷ்டத்துக்கும் ஆட்படாமல் ஹிந்துக்களால் நன்றாக நடத்தப்பட்டதாகச் சொன்னார்கள் என்பது வரலாறு. இன்றைக்கும், கேரளத்தில் பண்டைய ஹிந்து அரசர்கள் யூதர்களுக்கு வழிபாட்டுத் தலம் அமைக்க அளித்த நில உரிமைப் பட்டயத்தை யூதர்கள் நன்றியுடன் பாதுகாக்கின்றனர்.
பார்ஸீக்கள் இஸ்லாமியர்களால் ஈரானிலிருந்து அடித்து விரட்டப்பட்டபோது இந்திய அரசர்களே அவர்களுக்கு அடைக்கலம் அளித்தனர். சிரியாவிலிருந்து ரோமானியர்கள் விரட்டப்பட்ட பழமையான கிறிஸ்தவர்களுக்கு கேரள ஹிந்து அரசர்கள் ஆதரவு நல்கினர்.
ஹிந்துத்துவத்தின் பாரம்பரியம் இதுதான். மதநம்பிக்கையின் அடிப்படையில் அது எவரையும், எந்த சிறுபான்மை யினரையும் துன்புறுத்துவதில்லை.
தன் சொந்தக் குழந்தைகளைக் கொன்ற ஒளரங்கசீப்பின் மகனுக்கு அடைக்கலம் அளித்த குரு கோவிந்த சிங், தன் படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்களை சகோதரிகளாகப் பார்த்த வீர சிவாஜி இருவரும் இந்திய பாரம்பரியத்தின் சின்னங்கள். அப்படியிருக்கும்போது எப்படி ஹிந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதாக, அடக்குமுறை கொண்டதாக இருக்க முடியும்?
நிச்சயமாக ஹிந்துத்துவம் சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல. அதே சமயம், சிறுபான்மையினர் என்னும் பெயரில் சலுகை வாங்கி, மதமாற்றங்களைச் செய்து, ஹிந்து தர்மத்தையும் இந்த தேசத்தின் மண்ணின் பாரம்பரிய ஆன்மிக மரபுகளையும் அழிக்க நினைக்கும் சக்திகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு கேடயமாகவே ஹிந்துத்துவம் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பல்வேறு வகையினரான மத நம்பிக்கைகளுக்கு இந்த நாட்டில் அரணாக விளங்குவது ஹிந்துத்துவமே.
பஹாய்கள் ஈரானிலும், அஹ்மத்தியாக்கள் பாகிஸ்தானிலும், ஃபெலூன்காங்க் அமைப்பினர் சீனாவிலும் படும் கஷ்டங்களையும், அனுபவிக்கும் மனித உரிமை மீறல் களையும் உதாரணமாகக் காணலாம். ஈரானிலும் பாகிஸ் தானிலும் சீனாவிலும் ஆதிக்க சக்திகளாக இருப்பவர்களும் அவர்களால் அடக்குமுறை அனுபவிப்ப வர்களும், இந்தியாவில் சமரசத்துடன் வாழ முடிவது எப்படி? ஹிந்துத்துவப் பண்பாடே காரணம் அல்லவா?
ஹிந்துத்துவம் பழமைவாதமா?
ஹிந்துத்துவம் பழமைவாதமன்று. ஹிந்து பாரம்பரியமே “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என சூத்திரம் படைத்த மரபாகும். தம் முன்னோர் தோண்டியது என்பதாலேயே, உப்பு நீர் உள்ள கிணற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது தவறு என ஒரு சமஸ்கிருதப் பழமொழி சொல்கிறது. புதுமை என்பது மேற்கத்தியப் பண்பாட்டை அப்படியே காப்பி அடிப்பது அல்ல, மாறாக, நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதுதான்.
உதாரணமாக, தொழில்நுட்பங்களில் மேற்கத்திய தொழில்நுட்பம் அதிக மூலதனமும் அதிக எரிபொருளையும் வீணாக்கக் கூடியது. மாசு ஏற்படுத்தக் கூடியது. எனவே, அத்தகைய தொழில் நுட்பங்களை நம்சூழலில் பயன் படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, நம் சூழலுக்குத் தகுந்தவாறு தொழில்நுட்பத்தைத் தகவமைக்க வேண்டுமென ஹிந்துத்துவம் கூறும். ஹிந்துத்துவம் நம் மரபு சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இன்றைக்கு அறிவியல் முழுமைத் தன்மையுடன் பிரச்னைகளை அணுக வேண்டும் எனும் முடிவுக்கு வந்துள்ளது.
நியூட்டன் கால இயற்பியல் பார்வை இயந்திரத்தன்மை கொண்டது. கார்ட்டீசிய அணுகுமுறை அல்லது பகுப்பாய்வு முறை எனச் சொல்லப்படும் அறிவியலே 9ஆம் நூற்றாண்டில் கோலோச்சியது. எந்த விஷயத்தையும் பிரித்து, அதன் பகுதிகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ஒரு பொருள் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பது இந்த கோட்பாடு. உயிரினங்கள், சமுதாய அமைப்புகள், ஏன் இந்த பிரபஞ்சம் முழுதுமே இயந்திரத்தன்மை கொண்டதாக இந்த அணுகுமுறையில் காணப்பட்டன. ஆனால், புதிய இயற்பியல் என ஐன்ஸ்டைனாலும் க்வாண்டம் இயற்பியலாளர்களாலும் முன்வைக்கப்பட்ட அறிவியல் இதனை மாற்றியது.
அதன் தொடர்ச்சியாக, இந்த பிரபஞ்சம் என்பது இயந்திரங்கள் என்றும் அதன் இருப்பு பல நுண்ணியத் தொடர்புகளால் ஆனது, அது பிரித்துப் பார்க்கும் பகுத்தாய்வால் விளக்க முடியாதது என்றும் அறிவியலாளர்கள் அறிந்து கொள்ள ஆரம்பித்தனர். அணுவுக்குள்ளும் சரி, அண்ட சராசரங்களிலும் சரி, ஜடமாகக் கருதப்பட்ட அனைத்தும் மிகத்தீவிர இயக்கங்கள் கொண்டவை என்பதை அறிவியலாளர்கள் அறிந்தனர். இந்தப் புதிய பிரபஞ்ச தரிசனத்தை வெளிகாட்டும் மிகச்சிறந்த ஒரு குறியீடாக அவர்கள் எதைக் கண்டார்கள்?
சோழர்களின் செப்புத் திருவடிவமான நடராஜரையே அவர்கள் கண்டார்கள். கலை ஆன்மிகம் அறிவியல் ஆகியவற்றை இணைக்கும் ஒரு சிறந்த புள்ளியாக ஹிந்து பண்பாட்டின் ஆன்மிகச் சின்னமான நடராஜ தத்துவம் விளங்குகிறது.
இயற்பியலில் மட்டுமல்ல; உயிரியல், உளவியல், சுற்றுச் சூழலியல், நரம்பியல், பொருளாதாரம் எனப் பல துறைகளில் பாரதிய சிந்தனை மரபு இன்றைய அறிவியலின் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருந்து வருகிறது.
மருத்துவத்துறையை எடுத்துக்கொண்டால், சுஷ்ருதர், சரகர், அகஸ்தியர் ஆகியோர் இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையை உருவாக்கியுள்ளனர். மனிதனுடைய நோய் என்பதை அதன் முழுமையான சூழலில் அணுக வேண்டும் என்பதையும், மருந்துகள் இயற்கையோடு இணைந்த மூலிகைகள் மற்றும் வாழ்க்கை முறை என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நமது பாரம்பரிய உணவு முறைகளேகூட நோய் தடுக்கும் தன்மை கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாழ்வியலும் ஹிந்துத்துவத்தின் ஒரு பகுதியே. இதனை இன்றைய நவீன அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.
எனவே, ஹிந்துத்துவம் என்பது பழமைவாதமல்ல என்பது மட்டுமல்ல. ஹிந்துத்துவ சிந்தனை அறிவியல் பார்வையை வளர்க்கும் என்பதுமே உண்மை. மேற்கத்திய தரிசனங்கள் மனிதனின் ஏதேனும் ஒரு பரிமாணத்தை மட்டுமே மிகைப்படுத்திப் பார்க்கும் தன்மை கொண்டவை.
உதாரணமாக சிக்மண்ட் ஃப்ராய்ட் அனைத்து மானுட எழுச்சிகளையும் காமத்தின் அடிப்படையிலேயே நோக்கினார்.
காரல் மார்க்ஸ், மானுட வரலாறையே உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அளவிட்டார்.
முதலாளித்துவமும் சரி, கம்யூனிசமும் சரி, பொருளா தாரத்தையே மைய சக்தியாகக் கண்டன. மைய அரசு சார்ந்த கட்டுப்பாடு அல்லது கட்டற்ற சந்தை இலாபம் என்பவையே முக்கிய இயக்க சக்திகளாகக் கருதப்பட்டன.
ஆபிரகாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள், “மத்திய கிழக்கில் உதித்த மதங்கள்’ தெய்வீகக் கட்டளைகளே மானுடத்தின் அனைத்துத் துறைகளையும் ஆள வேண்டுமெனக் கருதினர்.
ஆனால், இந்திய ஹிந்துத்துவ சிந்தனை, மனிதனை அவ்வாறு கூறுபோட்டுப் பார்க்கவில்லை. திருவள்ளுவர் மனிதனின் இருத்தல் அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்று பரிமாணங்களாலும் ஆனது என்பதைத் தெளிவாகக்கூறி, அதன் அடிப்படையிலான வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கிறார். அனைத்து அறநூல்களும் இந்த மூன்று வாழ்க்கை உந்துதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன.
சமஸ்கிருதத்தில் இது தர்ம அர்த்த காம புருஷார்த்தங்கள் எனக் கூறப்படுகின்றன. ஹிந்துத்துவம் மட்டுமே மனிதனை முழுமையாகக் காணும் ஒரு பார்வையை அளிக்கிறது. பிற பார்வைகளை அவற்றுக்குரிய இடத்தில் நிலைநிறுத்துகிறது. இந்த புருஷார்த்தங்கள் மனிதனை எங்கே இட்டு செல்கின்றன? ஒரு கற்னையான சுவர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அல்ல. விடுதலையே மானுடத்தின் சுயநிலை, இயற்கை உரிமை என்பதையும் அவை அறுதியிட்டுச் சொல்கின்றன.
மோட்சம் அல்லது வீடுபேறு என்பது முக்தி அல்லது விடுதலையை குறிப்பதாகும். மானுட வரலாற்றில் விடுதலையை ஆதர்சமாக முன்வைத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் ஒரு பண்பாட்டை உருவாக்கியப் பெருமை ஹிந்துஸ்தானத்துக்கே உரியது. விடுதலையே உண்மைத் தேடலின் அடிப்படை ஆதாரம்.
அறிவியல் என்பதே உண்மையைத் தேடுவதாகும். வேதாந்த மதிப்பீடுகள் நம் தேசிய அறிவியல் எழுச்சிக்கு வித்தாக இருந்தன என்பதையும் நாம் அறிகிறோம். அது ஜகதீஷ் சந்திர போஸாகட்டும், ஆச்சார்ய பிரபுல்ல சந்திரராயாகட்டும், டாடாவாகட்டும், சத்யேந்திர நாத் போஸாகட்டும், ஜியார்ஜ் சுதர்ஸனாகட்டும் அவர்களுக்குள் அக்கினிப்பொறி ஏற்றியது அத்வைத ஒளியே. பெரும் தேசிய அறிவியல் எழுச்சியை ஹிந்தமறுமலர்ச்சியே உருவாக்கியது.
எனவே, அறிவியல்பூர்வமான வாழ்க்கைக்கு ஹிந்துத் துவமே வழிகோலும் சித்தாந்தமாகும்.
Shareing for : அர்த்தமுள்ள இந்து மதம் - Meaningful Hinduism